Saturday 4 March 2017

பாகம் 4
பின் வெளியே வந்தாள். வித்யா உர் என அமர்ந்திருந்தான்.
சார், சாரி வெரி சாரி... என்ன பேசறோம்னு தெரியாம பேரச்சொல்லி கூப்பிட்டு கண்டிச்சு பேசி எல்லாம் பண்ணீட்டேன். மன்னிச்சுடுங்க.
நான் சொல்லி புரியவெச்சிருக்கேன்... ஒத்துகிட்டா குழந்தை... மாதத்தில் ஒரு நாள் நாங்க பாத்துக்க, கூடஇருந்து  ஸ்பெண்ட்  பண்ண நீங்க அனுமதிக்கணும்... அதையும் மெல்ல மெல்லமா நான் மாத்திடறேன் என்று கூறினாள்.
அவனால் அவள் கூறுவதை உணர்ந்தாலும் நம்ப முடியவில்லை. பவி அடம் பிடிக்காமல் கூறுவதைக் கேட்டுக்கொண்டாளா, ஒப்புக்கொண்டாளா?... மாதத்தில் ஒரு நாள் தானே போகட்டும் ஒரு நல்லா செஞ்சாக இருக்கும் என்று ஆச்சர்யமாக அவளைப் பார்த்து பாரட்டும் தொனியில்

ஓ தாங்க்ஸ் மதுரா, எப்படி, எப்படி ஒத்துக்க வெச்சீங்க?” என்று பிரமித்தான்.
நீங்க மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம். அதனால் என்ன... இது அபீஸ் இல்லையே பேரச் சொன்னால்தான் என்ன. அதானே என் பேரு என்று இலகுவாக நகைத்தான். ஹப்பா என்று இருந்தது.
இன்னிக்கி இரவு என் கூட தூங்கணுமாம்...” என்றாள் மெல்ல.
ஓ அப்படியா! ஆண்ட்டிய பார்த்ததும் அப்பா வேண்டாமாமாஎன்றான்
ஐயோ அப்படி இல்லை என்றாள் அவசரமாக.
இல்லை நான் சும்மாதான் சொன்னேன்... தூங்கட்டும்... உங்க தூக்கம் கெடுமேன்னுதான் நான் யோசிச்சேன் என்றான் புன்னகையுடன்.
அன்றிரவு அவர்களோடு உண்டுவிட்டு பின் பவியோடு அவளது அறைக்கு போய்விட்டாள்.
ரொம்ப அமைதியான நல்ல குணம் இந்த பொண்ணுக்கு என்று பாராட்டிக்கொண்டார் பார்வதி. கூடவேஹும்என்று பெருமூச்சுவிட்டபடி. “அம்மா...” என்றான் உஷ்ணமாக. வாயை மூடிக்கொண்டார்.

பவியை அணைத்துக்கொண்டு படுத்தபடி அவள் காதோரமாக நல்ல சில கதைகள் சொன்னாள் மெல்லிய குரலில்.
ஆண்டி பாட்டுபாடுங்களேன் என்றது.
ஐயோ, எனக்கு பாட எல்லாம் தெரியாது குட்டிமா என்றாள்.
ப்ளீஸ் என்றது.
பின் மெல்லிய குரலில்
கண்ணே கமல பூ காதிரண்டும் வெள்ளரி பூ
மின்னிடும் உன் பொன் மேனி செண்பக பூ செண்பக பூ
முல்லை பூ கட்டிடமாம் முகப்பெல்லாம் புத்திரமாம்
முகப்பை திறந்து விட்டால் முல்லை பூவின் வாசனையாம்
சின்ன வாய் மணக்குதடீ சிங்கார கண்ணு
சித்திரமே பொற்கொடியே சீக்கிரம் நீ உறங்கு...” பாடினாள்

அவளை அணைத்துக்கொண்டு முகம் கொள்ளா சந்தோஷத்தோடு அவள் மேல் கால் போட்டபடி, பாடும் அவள் முகத்தையே பார்த்தபடி உறக்கம் பிடித்தது குழந்தை.
பவி என்ன படுத்துகிறாளோ என்று காண வந்த வித்யா இந்த கண்கொள்ளா காட்சியை மனம் நிறைந்து பார்த்துவிட்டு சப்தம் செய்யாமல் சென்றுவிட்டான். இப்போது ஹும் என்று பெருமூச்சுவிடுவது அவன் முறை ஆயிற்று.

அத்யாயம் ஒன்பது
காலையில் எழுந்து முகம் கழுவி காபி குடித்தானதும் நான் கிளம்பட்டுமா மா?” என்றாள் மெல்ல மதுரா.
வித்யாவும் அப்போது தன் இரவு உடையில் கீழே இறங்கி வந்தான்.
நல்லா தூங்கினீங்களா மதுரா... பவி ஒண்ணும் படுத்தலையே என்றான் ஒன்றுமே காணாதவன் போல.
அவ சமத்தா இருந்தா... இரண்டு பேருமே நல்லா தூங்கீட்டோம் சார் என்றாள்  அவ இன்னும் முழிக்கலை அதான் நான் கிளம்பலாம்னு...” என்று நிறுத்தினாள்.

அப்போது
ஆண்ட்டி என்று குரல் கொடுத்துக்கொண்டே வந்தது பவி. அதை ஆச்சர்யமாக பார்த்தனர் வித்யாவும் பார்வதியும்.
நானும் காபி என்றது. “உங்களுக்கு பூஸ்ட் போட்டிருக்காங்களே காமு ஆண்ட்டி.. ரொம்ப நல்லா இருக்காமே என்றபடி அதை வாங்கி அவளை குடிக்க வைத்தாள்.
நான் இப்போ எங்க வீட்டுக்கு போகணும் பவி... அங்க எனக்கு நிறைய வேலை இருக்கு... நீதான் குட் கர்ள் ஆச்சே... படுத்தாம சமத்தா இருப்பெதானே ... அதானே நம்ம டீல் என்றாள் கட்டை விரலை உயர்த்தி.
அழுகை வந்தாலும் அதை அடக்கி ஆம் என்று தலை ஆட்டி அதுவும் கட்டை விரலை உயர்த்தி அவளோடு முட்டியது.

நான் போயிட்டு வரட்டுமா... நீ சிரிச்சபடி பை சொன்னாதானே எனக்கும் சந்தோஷம் என்றாள் அவளது பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டபடி. அதுவும் முத்தமிட்டது.
சரி ஆண்ட்டி என்றது மழலையில். ‘செல்லமே என்று மனம் கேளாமல் அவளை தூக்கிக்கொண்டு வாசல் வரை வந்தாள். பின்னோடு பார்வதியிடமும் வித்யாவிடமும் விடைபெற்று அவனிடம் பவியை கொடுத்துவிட்டு நடந்தாள்.
நான் கொண்டுவிடறேன் என்று வித்யா கூறி இருந்தான். அவன் பவியை பார்வதியிடம் கொடுத்துவிட்டு காரை கிளப்பினான்.
கண்ணீர்முட்ட பை சொல்லியது பவி. பார்வதிக்குமே கண்கள் நிறைந்தன.

வீட்டில் போய் இறங்கிக்கொண்டு
தாங்க்யு சார் என்றாள்.
தாங்க்ஸ் அ லாட் மதுரா என்றான் அவனையும் அறியாமல் கண்களில் ஒரு ஆற்றாமையோடு அவள் கைகளை பிடித்தபடி.
இட் மீன்ஸ் அ லாட் டு மீ என்று விட்டு சட்டென கிளம்பிவிட்டான். அவன் போவதையே பார்த்தபடி நின்றுவிட்டு தன் பிளாட்டிற்கு சென்றாள். வெறுமையாக இருந்தது. ‘சே இது என்ன என்று கண்டித்துக்கொண்டு தன் வேலைகளில் மூழ்கி போனாள். ஞாயிறு ஆதலால் வீட்டை சுத்தம்செய்து மற்ற வேலைகளை பார்த்து சமைத்து சாப்பிட்டு என்று வேலை இருந்ததில் மனது சமனபட்டது.

கொஞ்சம் படுத்து எழுந்து மாலை மனம் கேட்காமல் வித்யாவின் வீட்டு நம்பரை அழைத்தாள். “ஏன் கூப்பிட்டாய்?” என்று திட்டுவானோ என்று பயம்தான். ஆயினும் பவிகுட்டி கண்ணிலேயே நின்றது.
ஹலோ என்று வித்யாவின் அழ்ந்த குரல் கேட்டு தூக்கிப்போட்டது.
நா...  நான் மதுரா என்றாள்.
ஓ ஹாய் மதுரா, சொல்லுங்க என்றான் சகஜமாக.
இல்லை பவி எப்படி இருக்கானு...”
நல்லா இருக்கா.. நீங்க சொன்னத வேதவாக்கு மாதிரி பிடிச்சுகிட்டு இப்போலேர்ந்தே நாட்கள எண்ணிக்கிட்டு இருக்கா... உங்களோட இந்த மாதத்து கடைசி ஞாயிறு ப்ரோகிராமாமே... ஒரே பிளானிங் தான்... இப்போ உடம்பு நார்மலா தான் இருக்கு... எதுக்கும் நாளைக்கு டாக்டர்கிட்ட காமிச்சுடுவேன்.. . தாங்க்ஸ் பார் ஆஸ்கிங் என்றான்.
சற்றே நிம்மதி ஆனது. ‘சண்டே ப்ளான் போடுகிறாளா. வாலு என்று சிரித்துக்கொண்டாள்.
எனிதிங் எல்ஸ் மதுரா?” என்றான்
இல்லை சார் தாங்க்யு என்று அவசரமாக வைத்துவிட்டாள்.

அத்யாயம் பத்து
அடுத்த நாள் எப்போதும் போல ஆபீஸ் சென்றாள். எல்லோரும் குழந்தை பவியை பற்றிக்கேட்டனர். சொன்னாள்.
பின்னோடு வித்யாதரன் வர, தங்கள் வேலைகளில் மூழ்கினர். இரண்டு நாள் வேலை சேர்ந்து போயிருந்தது வேறு. மூச்சுவிட நேரமில்லை.

அன்று மாலை வசு கூப்பிட்டாள். “என்னடி இந்த வீகெண்ட்ல கூப்பிடவே இல்லை?” எனத் திட்டினாள்.
சாரிடி இங்க ஒரு இக்கட்டு என்றாள்.
என்னடி உனக்கொண்ணும் இல்லையே என்று பதறினாள் வசு
ஐயோ இல்லைடி கேளு என்று விவரமாகக் கூறினாள்.
அடப்பாவமே, இப்படி இந்தக் குழந்தைய ஏங்கவிட்டுட்டுப் போக அந்தம்மாவுக்கு எப்பிடிதான் மனசு வந்ததோ என்று அவளும் அங்கலாய்த்தாள்.
அது போகட்டும், நீ என்ன கொஞ்சம் அதிகமா ஈடுபடுத்திக்கிறாப்போல தோணுதே மதுரா என்றாள்.
அதேல்லாம் இல்லை வசு... என்னை உனக்கு தெரியாதாடி... பாவம் பவின்னுதான் என்றாள்.
என்னமோடி பாத்துக்கோ... அப்படி எல்லாம் ஆசை வெச்சுடாதே மதுரா... குழந்தை மேல மட்டும் இல்ல. நான் சொல்றது புரியுதா.. உன் பாஸ் மேலயும் தான்... இந்த பணக்கார ஆளுங்களே அப்பிடிதான்.

அடப்போடி, பைத்தியம் போல பேசாதே.. அந்த ஆளுக்கு அசலே பெண்களைக் கண்டால் அலர்ஜி... இதுல எனக்கு வேற பொழப்பா இல்லை?” என்றாள்.
அதெல்லாம் நல்லாத்தான் பேசறே.. ஏதோ தோணிச்சு சொன்னேன்
அதுபோகட்டும் விடு, இங்க கல்யாணத்துக்கு நாள் குறிச்சுட்டாங்கடீ அதான் அவசரமா கூப்பிட்டேன்... அடுத்த வாரம் நாங்க சென்னை வரோம்... கல்யாண பர்சேஸ் முடிக்க.... அதான் அங்க நம்ம வீட்டிலேயே  தங்கிக்கலாம்னு...” என்று இழுத்தாள்.
இதுல யோசனை வேற வரூதா உனக்கு... டவுட் வேறயா... மவளே கையில கெடச்சே தொலைஞ்சே... இங்கதான் வரணும் இருக்கணும். நானும்தான் வருவேன் ஷாப்பிங் என்றாள் உரிமையோடு.
நீ இல்லாமையா டீ?” என்று சிரித்தாள் வசு.
ஒண்ணு தெரியுமா மதுராநான் அவரோட போனில் பேசினேன் இரண்டுவாட்டி என்றாள் நாணத்தோடு
அடிசக்கை என்றாள் மதுரா.
அவர்கிட்ட நேரடியாவே கேட்டுட்டேன் ஏங்க உங்களுக்கு கூடப் பிறந்த அண்ணன் தம்பி யாராச்சும் இருக்காங்களா கல்யாணம் கட்டாமன்னு”.

அடிப்பாவி எதுக்குடி?” என்றாள் மதுரா.
எதுக்கா,  அப்படி யாராச்சும் இருந்தா உன்னை அவங்களுக்குக் கட்டிவெச்சு கூடவே கூட்டி போய்டுவேனே அதான் என்று சிரித்தாள்.
ஏண்டீ உனக்கு இந்த எண்ணம் நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா? அதுதான் போகட்டும் ஒன்னோட அவர்கிட்ட பேச கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்திக்காம இதைப் பற்றியா பேசுவே ஒருத்தி, சரியான மக்குடீஎன்று கிண்டலடித்தாலும் தன் தோழியின் மனது புரிந்து கண்கள் பனித்தன. இவளும் மணமாகி சென்றுவிட்டால் தான் தனி மரமாகிவிடுவோம் என்று அப்போதே மனம் கலங்கியது.
அதேல்லாம் நாங்க நல்ல விவரம் இல்லஎன்றாள் வெட்கபட்டபடி.
ஓஹோ அப்படியா சங்கதி. நேர்ல வா பேசிக்கறேன்... ஒண்ணுவிடாம சொல்லீடணும் ஆமா சொல்லீட்டேன் என்று மிரட்டினாள்.
பார்க்கலாம் என்றாள் வசு கெத்தாக
சரிதான் நீ எப்போ கிளம்பி வர்ரே?” என்று கேட்டுக்கொண்டாள்.
வர்ர சனிக்கிழமை காலையில அங்க இருப்போம் மதுரா என்றாள்.
உனக்கு சனி லீவ்தானே இந்த புது கம்பனியில?” என்று கேட்டுக்கொண்டாள்.
அரைநாள் இருக்குடீ... நான் சொல்லிக்கறேன்... சனி ஞாயிறுல ஷாப்பிங் எல்லாம் முடிச்சுடுவோம்... மேற்கொண்டு பாத்துக்கலாம். சேர்ந்து ஆறு மாசம் தானே ஆகுது நிறைய நாள் லீவ் போட முடியாது... பின்னோட உன் கல்யாணத்தின்போது வேற லீவ் எடுக்கணுமே என்றாள் மதுரா.

ஆமாடி இதெல்லாம் ஒரு தொல்லை... ஜாலியா கூட்டிப்போய் வெச்சுக்கலாம்னா இந்த லீவ் விஷயம் ஒதைக்குதுஎன்று புலம்பினாள் வசு.
சரிடி சனிகிழமை மீட் பண்ணலாம் என்று வைத்தனர். மதுராவிற்கு உற்சாகமாக இருந்தது.
அந்தவாரம் ஓடியே போனதுபோல தோன்றியது. பொழுது விடிந்தால் தன் உயிர் தோழி வந்துவிடுவாள் என்று மகிழ்ச்சியோடு வித்யாவின் அறைக்குச் சென்று சார் என்றாள் தயக்கமாக

என்ன மதுரா?” என்றான். இப்போது கொஞ்சம் சகஜமாக பேசினான் அவளிடம்முகத்தை ஏறிட்டு பேசினான்.
நாளைக்கு என் உயிர் தோழி வசு குடும்பத்தோட சென்னைக்கு வரா, அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு... அதுக்காக கொஞ்சம் கல்யாண பர்சேஸ் பண்ண நான் ஹெல்ப் பண்ணனும்... நாளைக்கு அரைநாள் லீவ் குடுக்க முடியுமா?” என்றாள்.
ஓ ஆமா உங்க ப்ரிண்ட்,  தெரியும்... அம்மா சொன்னாங்க, ரெண்டு பேரும் ஒண்ணாவே வளர்ந்து படிச்சு வேலைக்கு போய், என்று இருந்தீங்க இல்லையா... சரி சரி என்ஜாய்... சனிக்கிழமை இங்கே ஒண்ணும் பெரிசா வேலை இல்லை என்றான் சிரித்தபடி.

தாங்க்யு சார் என்று கூறிவிட்டு வெளியே வந்தாள். ஆபிசிலிருந்து வரும்போதே கொஞ்சம் காய்கறி, பழங்கள், பால், ஸ்வீட்ஸ் என்று வாங்கிக்கொண்டு வந்து வைத்தாள்.
வீட்டை சுத்தப்படுத்தி, கெஸ்ட் ரூமை நீட்டாக மாற்றி அமைத்து ரெடி செய்தாள். அவளது பெற்றோர் அங்கு தங்குவார்களே என்று. வசு எப்படியும் தன்னோடுதான் படுப்பாள். அவர்கள் படுத்து அரட்டை அடிக்க ஆரம்பித்தால் கோழி கூவிவிடும் சில நேரம். என்ன பேசுவார்களோ தெரியாது. அப்படியே தூங்கியும் போவார்கள். அது ஒரு காலம் என்று ஏக்கம் வந்தது.

அத்யாயம் பதினொன்று
அடுத்த நாள் பொழுது விடிய எழுந்து இட்லி சட்னி சாம்பார் செய்து ஹட் கேசில் வைத்தாள். காபிக்கு தயாராக பால் டிகாக்ஷன் எல்லாமும் வைத்தாள். பின்னோடு செக்யுரிட்டி போன் வந்தது மேலே அனுப்பச் சொன்னாள். ஓடிபோய் வாசலில் நின்றாள். வசு முன்னதாக நாலு நாலு படிகளாக ஓடி வந்து இவளை கட்டிக்கொண்டாள். இருவரும் சிரித்து கட்டி பிடித்து மகிழ்ந்து எல்லாம் செய்ய, அதற்குள், ரெண்டு பேரும் வாசற்படியிலேயே ஆரம்பிச்சுட்டீங்களா என்று சிரித்தபடி அவளது பெற்றோர் லிப்டில் ஏறி வந்தனர்.

வாங்கம்மா வங்காப்பா என்றாள் ஆசையாக மதுரா.
நீ இப்படி கூப்பட்றதே அழகுடி மதுரா என்று அணைத்துக்கொண்டாள் கற்பகம் வசுவின் தாய்.
எப்பிடிமா இருக்கே தனியா, உனக்குதான் போர் அடிக்கும் இல்லையா என்றாள் ஆதுரத்துடன்.
வேலை நல்லா இருக்கா கண்ணு?”  என்றார் தந்தை வீராசாமி.
நல்லா இருக்குதுங்கபா என்றாள். உள்ளே அழைத்து அமர்த்தி இரு பெண்களுமாக கிளுகிளு என்று சிரித்தபடி மளமளவென காபி போட்டனர். குடித்தபின் கொஞ்சம் நேரம் படுக்கறீங்களா பா?”  என்றாள் மதுரா.
வேண்டாம் தாயி, நிறைய வேலை கிடக்கு... ரயிலுல நல்லாத்தான் தூங்கினோம்... அதனால பரவாயில்லைடா கண்ணு என்றனர்.

சரி குளிச்சுட்டு வாங்க சூடா பலகாரம் சாப்பிடலாம் என்றாள்.
டிபன் ஏதோ பண்ணீட்டே உன் ஆசைக்கு.. போதும் மதுரா... மிச்சமெல்லாம் நாம வெளியில பாத்துக்கலாம்.. எப்போதோ சந்திக்கறோம் சமையல் அறையிலேயே அடைஞ்சு கிடக்காதே கிளம்பு நீயும் சீக்கிரமாஎன்று அதட்டி கிளப்பினாள் வசு.
எல்லோரும் குளித்து காலை உணவு முடித்து வெளியே கிளம்பினர். முழு நாளுக்குமாக ஒரு வாடகை கார் ஏற்பாடு செய்திருந்தாள் மதுரா. “ஆபீசிற்கு ரெகுலராக கொடுப்பவர் அவர். அதனால் நம்பிக்கையாக எடுக்கலாம்என்றாள். “டி நகர் போய்டலாம், எல்லாம் ஒரே இடமா கிடைச்சுடும் என்று அங்கு சென்றனர்.

முதலில் தாலிக்கு ஆர்டர் செய்யவேணும் பிறகு மத்ததெல்லாம் என்றார் கற்பகம்.
சரி என மிகச் சிறந்த நகைக் கடை ஒன்றில் உள்ளே சென்று பார்த்து ஆர்டர் கொடுத்தனர். கூடவே வசுவிற்கு சில நகைகள் வாங்கினர். அதன் பிறகு பட்டுப்புடவை கடையில் நுழைய
நீங்க பெண்டுகள் மூணு பெரும் உள்ள நுழஞ்சுட்டீங்க இல்ல, அவ்ளோதான் போ... நான் இங்கேயே இருந்து ஒரு குட்டித் தூக்கம் போடறேன்.. நீங்க பாத்து வாங்கீட்டு வாங்க தாயீ என்றார் சிரித்தபடி வீராசாமி.
அப்பா என்று சிணுங்கினர் பெண்கள் இருவரும்.
அவரு கிடக்கறாரு நீங்க நடங்க கண்ணு நாம பாத்துக்கலாம் என்று அழைத்துச் சென்றார் கற்பகம்.

அங்கு வசு கடை சிப்பந்தியை முழி பிதுங்க வைத்துவிட்டாள்
. சிறிது நேரம் பார்த்தபின் கற்பகம் ஒரு அதட்டு போட்டு
“என்ன வேணுமோ அத மட்டும் காட்டி எடுக்கச் சொல்லு கண்ணு
, பாவம் இல்லையா அவுங்க என்றார்.
அதன்பின் மளமளவென புடவை தேர்வு ஆனது. பெண் அழைப்புக்கு மதுராவிற்கும் வசுவினது போலவே ஜோடியான சேலை எடுத்தார் கற்பகம்.
ஐயோ வேண்டாம் மா, எனக்கு இருக்கறதே நான் கட்டறதில்ல என்றாள்.
மூச், பேசாம கலரப் பாத்து பிடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லு அம்பிடுதேன் என்றார் கற்பகம். பின் சில உறவினர்களுக்கும் எடுத்து முடித்து சிப்பந்தி தூக்கமாட்டாமல் தூக்கிவந்து அவர்களது வாடகைக் காரில் ஏற்றினார்.
மணி அப்போதே இரண்டு அதனால் பக்கத்திலேயே சரவணா பவனில் போய் நல்லதாக சாப்பிட்டுவிட்டு மற்ற இதர ஷாப்பிங் முடித்தனர்.
எல்லாம் முடித்து வீடு திரும்பியபோது மாலை ஐந்து. களைத்து போய் அமர்ந்தனர்

பின்னோடு இரவு உணவிற்கு இலகுவாக செய்து உண்டுவிட்டு எல்லோருமாக சிரித்து வசுவை கிண்டலும் கேலியுமாக செய்து லூட்டி அடித்து படுக்கச் சென்றனர்.
சொல்லுடி என்ன பேசினே உன்னோட அவரோட என்று கிண்டினாள் மதுரா.
அய்ய ஒன்றுமில்லை என்றாள் அவள் சிவந்து.
இந்தக் கதையே வேண்டாம் என்றாள்.
படிப்பு, பிடிச்சது பிடிக்காதது எல்லாம் பேசிகிட்டோம்... என்னை ரொம்ப பிடிச்சதாம் அப்படீன்னு சொன்னாரு என்றாள் மேலும் சிவந்து. “அப்பறம் என்ன ஸ்வீட் நத்திங்ஸ் தான் என்று சிரித்தாள்.

நீ சொல்லுடி உன் பாஸ் எப்படி என்றாள்.
அடிப்போடி சொல்ல என்ன இருக்கு...  ஏதோ பவிக்கு முடியாயலைங்கும்போது பாத்துகிட்டேன் அதுனால சகஜமா பேசறாரு... மனுஷன் நல்லவர்தான்... அந்த பொம்பள பண்ணிவெச்ச வெனை இன்னும் அவர் மனச அறுக்குது என்றாள்.
ஆனா பவி ரொம்ப ஸ்வீட்... பாவம் அது என்றாள்.
அரட்டை அடித்தபடி தூங்கி போயினர்.
அடுத்த நாள் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்து சாப்பிட்டு மாலை கடற்கரைக்கு சென்றனர். அங்கு இரு பெண்களும் ஓடி ஒருவரை ஒருவர் துரத்த மதுரா தொம்மென யார்மீதோ முட்டிக்கொண்டாள்.
சாரி, வெரி சாரி என்று நிமிர்ந்தாள். அது வித்யாதரன்.
சார் நீங்களா என்றாள். பின்னோடு ஆண்ட்டி என்று கூக்குரல் கேட்டது.
ஒரே உற்சாகமாக ஓடி வந்து அவள் காலைக் கட்டிக்கொண்டது பவி. அவளை தூக்கியபடியே
வசு இதுதான் என் பாஸ் மிஸ்டர் வித்யாதரன், இது அவர் மகள் பவித்ரா என்று அறிமுகம் செய்தாள்.
இது ஏன் தோழி வசு சார்... அது அவ பேரெண்ட்ஸ் என்றாள்.
வணக்கம் சொன்னான். பவி அதற்குள்ளாகவே தன் மழலையில் இவளிடம் ஏதேதோ பேசத் தொடங்கிவிட்டாள். அவளை தூக்கிக்கொண்டு எல்லாவற்றிற்கும் பதில் சொல்லியபடி மெல்ல நடந்தாள் மதுரா.

குட்டிக்கு இப்போ உடம்பு சரியாபோச்சா?” என்றாள்
ஓ சரியாபோச்சு... நான் குட் கர்ள் அ இருக்கேனே ஆண்ட்டி என்றது. “நாம எப்போ மீட் பண்ணுவோம் ஆண்ட்டி?” என்றது.
அதான் நீ ப்ளான் பண்றியாமே அடுத்த சண்டே என்றாள்.
ஹைய் ஜாலி, ஆண்ட்டி அது சண்டே இல்லை ஜாலிடேஎன்று சிரித்தது. இதைக் கண்டும் காணாமல் வித்யா இவர்கள் இருவரும் எப்படி ஒட்டிக்கொண்டனர் என்று ஆச்சர்யமாக பார்த்தான்.
போலாமா பவி, பாட்டி வெயிட் பண்ணுவாங்க என்றான். சரி என மனதில்லாமல் இறங்கி அவனிடம் ஓடினாள். கண் மறையும்வரை கை ஆட்டியபடி சென்றாள்.

வீட்டிற்கு வந்து உடல் கழுவி சாப்பிட்டு படுத்தனர். “மதுஎன்றாள் வசு. “இது நல்லதில்லைடா என்றாள்
என்னது?” என்றாள் விளங்காமல்.
உன் கண்ணுல தெரியுது நீ பவித்ரா மேல எவ்வளவு அன்பு வெச்சிட்டேனு... அவளுக்கும் நாளை ஒரு அம்மா வரலாம். உன் பாஸ் யாரையானும் மணக்கலாம். நீயும் நாளைக்கு யாரையானும் மணக்கத்தான் வேண்டும் ... அப்போ நீ இந்த குழந்தைய பார்க்கக் கூட முடியாது. இதைப்போல பொது இடத்தில தூக்கிக் கொஞ்சக்கூட முடியாது... இன்னும் அதென்ன சண்டே ப்ளான்?” என்றாள். மதுரா சொன்னாள். “வேண்டாம்டி என் பேச்சைக் கேளு... இது எங்க போய் முடியுமோன்னு எனக்கு பயமா இருக்கு... அவரோ முசுடா இருக்காரு... விலகியே இருடீ என்றாள் கலவரமாக. ‘தன் தோழிக்கு மறுபடியும் எந்த துன்பமும் ஏற்படக்கூடாது என்ற பயம் அதில் தெரிந்தது.

சரிடி இந்த ஒருவாரம் போயிட்டு பின் அவளை நல்ல வார்த்தைச் சொல்லி மாத்திடறேன். கேட்டுக்குவா என்றுஆறுதல் படுத்தினாள் மதுரா.

அடுத்த நாள் மதுரா வேலைக்குப் போக வசு தன் இதர தோழிகளை சந்தித்துவிட்டு வந்தாள். மாலை வீடு திரும்பி அவர்களுக்கு சாப்பாடு பாக் செய்து கொடுத்து வழி அனுப்பினாள் மதுரா.
வீடு வெரிச்சென்றிருந்தது. ‘சே என்ன வாழ்க்கை இது எனத்தோன்றியது. மனதை மாற்றித் தூங்கிப்போனாள்.
அடுத்த நாள் ஆபிசிலும் கொஞ்சம் டல்லாகவே இருக்க
என்ன எல்லாரும் ஊருக்கு போய்டாங்களா அதான் டல்லா இருக்கீங்களா மதுரா?” என்றான் வித்யா.
ஆம் என்று தலை அசைத்துவிட்டு வெளியே வந்துவிட்டாள். ‘பாவம் ஒற்றைப் பெண் எப்படித்தான் சமாளிக்கிறாளோ என்று தோன்றியது வித்யாவிற்கு.

அத்யாயம் பன்னிரெண்டு

அந்த வாரம் அப்படி கடக்க அடுத்த நாள் ஞாயிறு பவியுடன் என்பதில் இருவருக்கும் மகிழ்ச்சி. அவளுக்கென கடைக்கு போய் சில காமிக்ஸ் பொம்மை என வாங்கினாள். பின் அடுத்த நாள் காலையில் வித்யாவின் வீட்டிற்கு சென்றாள். சங்கோஜமாக இருந்தது. ஆயினும்...

தொடரும்...

No comments:

Post a Comment