Saturday 8 April 2017

நெஞ்சமதில் உன்னை வைத்தேன் - பாகம் 14

பாகம் 14

அது உண்மையே என்பதால் சில சமயங்களில் கூடப் போக ஒத்துக்கொள்வாள்.
இங்கேயே இப்படி என்றால் வெளிநாட்டில் போனால் கேட்கவும் வேண்டுமா. அப்போதே திருமணமான தேன் நிலவு ஜோடியைப் போல கொட்டம் அடிப்பான்.
அவளுக்கு வெட்கப்பட்டு மாளாது... சிவந்து போய் அப்படியே நின்றுவிடும் கன்னங்கள் சிவப்பேறி.
இப்படி எல்லாம் பண்ணினா நான் அடுத்த முறை வரமாட்டேன் என்பாள்.
சரி சரி என்று அடங்குவான் அப்போதைக்கு.

இப்போது அலுவலகத்தில்  எந்த ஒரு நெருக்கடியும் தனியே சந்தித்து சமாளிக்கும் நேர்த்தி பவிக்கு  வந்திருந்தது. வாழ்க்கை தினமும் ஒரு பாடம் கற்றுத் தந்தது.
அவளது தந்தையின் கம்பீரம் அப்படியே அவளுக்கு வந்திருந்தது. சாதா காட்டன் புடவை கஞ்சி இட்டு நேர்த்தியாக உடுத்தி எந்தவித பந்தாவுமில்லாமல் அவள் அலுவலகத்தினுள் நுழைந்தாலே பணியாளர்கள் மரியாதையுடன் வணங்கினர் . அதில் பயம் இல்லை பணிவு இருந்தது. அது அவள் ஈட்டிய மரியாதை.

வித்யா வியாபார விஷயமாக ஜெர்மனி சென்றிருக்க, தினமும் பவித்ரா ஆபிசிற்கு வந்து அமர்ந்து வேலைகளை கவனித்துக்கொண்டாள்
.
பழைய ஜி எம் வயதாகி ஒய்வு பெற்றுச் சென்றுவிட பாவி தனியே சமாளிக்க வேண்டி வந்தது. அவள் செய்யவும் செய்தால்.
இதற்கிடையில் வித்யாதரன் வேறு ஒரு நல்ல ஜி எம் வேண்டி நேர்முகம் நடத்தி அதில் வாசுதேவன் என்றவனை பெரிதும் பிடித்துபோய் வேலைக்கு தேர்வு செய்துவிட்டு சென்றிருந்தான். பவியிடம் சொல்லியே சென்றான்.

பவித்ரா ஒரே ஒருமுறை நேர்முகத்தின்போது அவனை பார்த்திருந்தாள்
. வித்யாவும் பழைய ஜி எம் மும் கேள்விகள் கேட்க அவன் தெளிவாக புத்தி கூர்மையுடன் பதில் அளிப்பதை கண்டிருந்தாள். அவனுடைய பேச்சு நடத்தை அறிவு எல்லோருக்கும் பிடித்துபோய்தான் அவன் அப்பாயிண்ட் ஆகி இருந்தான். இன்று அவன் வேலையில் சேருவதாக இருந்தது.

அவன் உள்ளே நுழைந்து நேராக இவளைக் காணவென அனுமதி கேட்டு வந்தான்.
எம் டி சார் ஊர்ல இல்லை.... அதான் அடுத்ததா உங்ககிட்ட வேலை ஏற்புப் பற்றி சொல்லிவிட்டு ஜாயின் பண்ணலாம்னு வந்தேன் என்றான். அதில் அளவுக்கதிகமான பணிவு இல்லை ஆனால் மரியாதை இருந்தது.... அடக்கம் இல்லை ஆனால் திமிரும் இல்லை....
சரி ஆல் த பெஸ்ட்.... எம் டி கு உங்க மேல ரொம்ப நல்ல அபிப்ராயம்..... அதை நீங்களும் காப்பாற்றணும்னு விரும்பறேன்.... பெஸ்ட் விஷஸ் என்றாள் கை கொடுத்தபடி.
அவன் புன்சிரிப்போடு அதை ஏற்று தாங்க்ஸ் மேடம்.... நிச்சயமா அப்படி நடந்துப்பேன் என்று கூறி அவனுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுக்குச் சென்றான்.
அவனும் வேலை பளுவில் தோள் கொடுக்க, வித்யா இல்லாத குறையே இல்லாது வேலைகள் நல்லபடி நடந்தது.

தினமும் நூறு விஷயங்கள் இருந்தன கவனிப்பதற்கும் முடிவு எடுக்கவும்
. அப்போதெல்லாம் பவித்ராவும் வாசுவும்  இணைந்தே முடிவுகள் எடுத்தனர். ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து டிஸ்கஸ் செய்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவன் தனியே எதுவும் முடிவு எடுக்காமல் இவளை கேட்டுக்கொண்டே செய்தான். அவளது மதிப்பில் உயர்ந்தான்.

அவளுக்குமே தனக்கு அதிகம் அனுபவம் இல்லை அப்பா வேறு ஊரில் இல்லை என்ற ஒரு சிறு பயம் உள்ளே இருந்தது
.
ஓரளவு நன்றாகவே இந்த பிசினசை பற்றி அவன் எல்லாமும் அறிந்து வைத்திருந்தான். தெளிவாக சிந்தித்தான். பதறாது வேலை பார்த்தான். ஆதலால் அவளும் எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்பும் அவனை ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டே செய்தாள்.

வித்யா ஊரிலிருந்து வந்து பார்த்து அசந்துவிட்டான். தன் மகள் இவ்வளவு நேர்த்தியாக தன் பிசினசை சமாளித்திருப்பதைக் கண்டு அவனுக்கு பெருமிதம் மகிழ்ச்சி.

அவள்
அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா.... நீங்க என்ன செய்வீங்களோ அதைப் பார்த்து கற்றுக்கொண்டதுதானே.... அதைத்தான் செஞ்சேன் என்றாள் அடக்கமாக.
அட, இவள் பேச்சைப் பாரேன்!!’ என்று வியந்து போனான்.
அடுத்ததாக அவனுக்கு ஆச்சர்யமான விஷயம் வாசு. அவனை தேர்ந்தெடுக்கும்போதே ஒரு பொறி தோன்றியது தான். ஆயினும் இவ்வளவு சீக்கிரத்தில் அவன் இத்தனை பொறுப்புடனும் அறிவுடனும் வேலை செய்வதைக் கண்டு மனதார பாராட்டினான். அதிலும் பவிக்கும் வாசுவிற்கும் இருக்கும் ஒரு நல்ல புரிதல், எல்லா விஷயத்திலும் அவர் இருவரும் ஒருவரை ஒருவர் கன்சல்ட் செய்தபடி விஷயங்களை ஹாண்டில் செய்வதைக்கண்டு பிரமித்தான்.

அத்யாயம் முப்பத்தி எட்டு
அப்போது அசோக்கும் பிரபுவும் ப்ளஸ் டூ முடித்துவிட்டனர். மேற்கொண்டு பிரபு பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்கச் சென்றிருந்தான் அசோக் டாக்டருக்கு படிக்க ஆசைபட்டான். அதன்படி அவர்கள் தத்தம் கல்லூரியில் சேர்ந்தனர்.

லீவ் நாட்களில் பிள்ளைகள் வீட்டிற்கு வந்தால் கும்மாளம் தான். மதுவிற்கு அந்நாட்கள் மிக சந்தோஷமானவை. அந்த சில நாட்கள் பவி ஆபிஸ் வந்தாலும் தம்பிகளுடன் கழிக்கவென சீக்கிரமே வீட்டிற்குச் சென்றுவிடுவாள். வித்யாவிற்கே வீட்டிற்குச் செல்ல பரபரக்கும். அதை அறிந்து வாசுவிற்கு ஆச்சர்யம். வித்யாவிடம் இவை எல்லாம் பேச அவனுக்கு பயம். மரியாதை தடுத்தது. ஆனால் அவன் பவியோடு ஈசியாக பேசிப் பழக முடிந்தது. அவளிடம் கேட்டான்.

அது என்ன மேடம், நீங்கலும் எம் டி சாரும் இந்த சில நாட்களாக வீட்டிற்குப் போவதில் ரொம்பவே ஆர்வமா இருக்கீங்க?”
அவள் சிரித்தபடி,ஓ அதுவா, ஒண்ணுமில்லை மிஸ்டர் வாசு.... பசங்க, அதான் என் தம்பி அசோக் மற்றும் என் கூடப் பிறக்காத தம்பி பிரபு கல்லூரிலேர்ந்து லீவுக்குனு வீட்டுக்கு வந்திருக்காங்க.... அப்படி அவங்க வரும்போது எங்க வீட்டுல பண்டிகைதான் என்றாள் சந்தோஷமாகச் சிரித்தபடி.
ஓ ஓன் நைஸ் பாமிலி என்றான் அதில் ஏக்கம் தெரிந்தது. பொறாமை இல்லை. பெருமூச்சு வந்ததோ என அவள் சந்தேகப்படுமுன் எப்போதும்போல முகத்தை சட்டென மாற்றிக்கொண்டுவிட்டான்.

இவன் மனதில் இருப்பதை யாருமே கண்டுவிட முடியாது போலும். ரொம்பவே எச்சரிக்கையா மூடி மறைச்சுடறான் என்று எண்ணிக்கொண்டாள்.
அடுத்த நாள் அப்பா மகள் இருவரும் ஆபீஸ் வரவில்லை. மகன்கள் வரவிடவில்லை. பார்த்தி வசு வேறு வந்திருந்தனர். எல்லோருமாக பிக்னிக் செல்ல இளைஞர்கள் திட்டம் தீட்டினர்.
முக்கியமான விஷயம் இருந்தால் போனில் கூப்பிடச் சொல்லி வாசுவிற்கு கூறினான் வித்யா

இன்று சனிக்கிழமைதான்... அதிகம் ஒன்றும் வேலை இல்லைன்னு நினைக்கறேன் என்று கூறினான்.
அவசரமான கை ஒப்பம் ஏதும் தேவை இருந்தா இப்போ வந்துருங்க வாசு.... நான் போட்டு குடுத்துட்டு கிளம்பறேன் என்றார்.
நான் பார்க்கறேன் சார்.... அப்படி எதுவும் இல்லை..... ஆனாலும் சரிபார்த்துட்டு சொல்றேன்..... அவசியமானாலே ஒழிய உங்களை தொந்தரவு செய்யாமல் பார்த்துகொள்றேன் சார் என்றான் பணிவாக.
வித்யா அவன் பதவிசு கண்டு புன்னகைத்துக்கொண்டான்.
என்னடா நீயே சிரிச்சுக்கற?” என்றபடி பார்த்தி வந்து அருகில் அமர்ந்தான்.
இல்லைடா, வாசுன்னு புது ஜி எம் அப்பாயிண்ட் செய்திருக்கேன்.... பைன் சாப்... ரொம்ப நல்லாப் பழகறான். ஏதோ ஒசந்த குடும்பத்து பையன் மாதிரி தெரியுது.....

ஆனா வெளில ஒண்ணுமே காட்டிக்கறதில்லை
.... ரொம்ப ஜென்டில்... அறிவு தெளிவு சாமர்த்தியம் எல்லாமும் நிறைஞ்சிருக்கு என்று கூறிக்கொண்டே போக,
என்னடா, நீ உன் ஜி எம் அ வர்ணிக்கறையா உன் வருங்கால மாப்பிள்ளையைப் பற்றி சொல்வதுபோல அளக்கிறாயே என்று பார்த்தி கேலி செய்ய சட்டென வித்யாவிற்கு ஒரு பொறி தட்டியது.
சரிதானே.... அதுவும் கூட நாட் அ பாட் ஐடியா என்று நினைத்துக்கொண்டான் சொல்லவில்லை.

பின்னோடு வாசு போன் செய்தான்.
சார், இப்போதான் ஒரு பாக்ஸ் வந்தது.... அதைமட்டும் நீங்க இப்போவே பாத்துட்டா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறன்.... அங்க கொண்டுவரட்டுமா?” என்று கேட்டான்.
யா ஷ்யூர், வாங்க வாசு என்றான்.

பவியும் அசோகும் பிரபுவும் எப்போதும் போல கும்மாளமும் கலாட்டவுமாக இருக்க, அந்த நேரத்தில் உள்ளே நுழைந்தான் வாசு
. அங்கிருந்த சூழல் அவனுக்கு மிகவும் பிடித்துப்போனது. கூடவே ஒரு ஏக்கமும் தோன்றியது. அதை மறைத்து மரியாதையுடன் வித்யாவின் அருகில் சென்று விஷ் செய்துவிட்டு பாக்ஸ் ஐ நீட்டினான்.
உக்காருங்க வாசு.... இது என் நெருங்கிய நண்பன் பார்த்திபன்... எங்கப்பா காலத்துலேர்ந்து நாங்க நண்பர்கள் என்று அறிமுகம் செய்துவைத்தான்.
வாசு கைகொடுத்து நான் வாசுதேவன் சார் என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டான்.

பார்த்தி, இதுதான் கம்பனியின் புது ஜி எம்.... வெறி ஸ்மார்ட்.... நல்ல அறிவு தெளிவு..... ரொம்ப திறமையானவர் என்று புகழ்ந்தான். அதைக் கேட்டு வாசுவிற்கு பெரும் கூச்சம் ஏற்பட்டது.
சாருக்கு என் மேல் அபிமானம் அதிகம் அதுனால இவ்வளோ புகழறார் சார் என்றான் பார்த்தியைக் கண்டு.
காபி கொண்டுவரச் சொன்னான் வித்யா.
வேண்டாம் என்று மறுக்க இருங்க குடிச்சுட்டு போகலாம்.... பசங்களா என்று குரல் கொடுக்க மூவரும் உள்ளே நுழைந்தனர்.
இது அசோக், எம் பிள்ளை, மெடிசின் படிக்கிறான்..... இது பிரபு, பார்த்தியின் பிள்ளை, மேனேஜ்மென்ட் படிக்கிறான்..... என் மகள் பவித்ரா உங்களுக்குத் தெரியும் என்று அறிமுகம் செய்தான்.
பிள்ளைகள் இருவரும் உடனே வாசுவிடம் தோழமை கொண்டனர். அவனும் அவர்களோடு சரிக்கு சரியாக பேசினான் எல்லா விஷயமும் அலசி தீர்த்தனர்.
டாட், ஹி இஸ் அ பைன் மான்..... ரொம்ப நல்லா பழகறார்..... அவரும் வரட்டுமே நம்மளோட என்றான் அசோக்.
நோ நோ மிஸ்டர் அசோக், எனக்கு ஆபிஸ்ல வேலை இருக்கு..... பாசும் அங்க இல்லாதபோது...” என்றான்.

ஓ, இட்ஸ் ஓகே வாசு..... சனிக்கிழமை, என்ன பெரிசா இருக்கப்போவுது..... பசங்க ஆசைப்படறாங்க இல்லை, வை டோன்ட் யு ஜாயின் அஸ் என்றான் வித்யா.
மதுவுக்கு இது அவசியமா என்று தோன்றியது வித்யாவை கண்ணால் வினவினாள்ஆம் என்றான் வித்யா. சரி ஏதோ விஷயம் இருக்கும் என்று அவள் மௌனமானாள்.
எல்லோரும் வற்புறுத்த வாசு சரி என்றான். அவனின் கூச்சம் கண்டு பார்த்தி ஆச்சர்யப்பட்டான். அவன் அடுத்து பிள்ளைகளோடு பேசிக்கொண்டிருக்க வித்யாவை பார்த்து என்னடா இவன் இவ்வளவு கூச்சப்படறான்.... ரொம்ப நல்லா பையனா தான் தெரியுது..... என்னடா ஏதானும் ஐடியா வெச்சிருக்கியா?” என்று வினவினான்.
இப்போதைக்கு இல்லை. ஆனால் ஒரு பொறி தோணிச்சு பார்க்கலாம் என்றான் வித்யா பூடகமாக.
உள்ளே சென்றபோது மதுவிடமும் அதையே கூறினான்.

எல்லோருமாக இரு கார்களில் கிளம்பினர்.
என் பைக் இருக்கே என்றான்.
மாலையில இங்கேயே வந்து எடுத்துகிட்டு போலாம் வாசு சார் என்றனர் பிள்ளைகள். அதுவும் சரி என்று வண்டியில் ஏறினான். இளைஞர்கள் ஒரு வண்டியிலும் பெற்றோர் ஒரு வண்டியிலுமாகக் கிளம்ப ஒரே கும்மாளம் அரட்டை பாட்டு விசில் என்று இருந்தது அந்த வண்டி. ஆனாலும் அசோக் பார்த்து ஓட்டினான். அவனுக்கு எப்போதுமே எச்சரிக்கை அதிகம். முக்கியமாக வண்டி ஓட்டும்போது.

சென்னையைத் தாண்டி அவர்களுக்கென ஒரு பார்ம் ஹவுஸ் இருந்தது. அங்கேதான் சென்றுகொண்டிருந்தனர். அருகருகே பார்த்தியும் வித்யாவும் ஒரே போல வாங்கி நடுவில் வேலிகளோ தடுப்போ இன்றி ஒரே  விசாலமான தோட்டமாக... ஒரே போன்ற இரு வீடுகளுமாகக் கட்டி இருந்தனர்.
அந்த இடம் வாசுவிற்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த வீட்டின் அமைப்போ பணக்கார பகட்டோ அவனை கவரவில்லை. அவன் இயற்கையை நேசிப்பவன் ஆராதிப்பவன். அதனால் அங்கு சென்றதுமே அவனுக்கு குப்பென ஒரு சந்தோஷம். அது அவன் முகத்திலேயே தெரிந்தது.

எல்லோரும் உள்ளே சென்று சிறிது இளைப்பாறி காபி குடித்து முடித்து இளைஞர்கள் வெளியே வந்தனர்
. அங்கு டென்னிஸ் கோர்ட் இருந்தது. நீச்சல் குளம் இருந்தது.
அசோகும் பிரபுவும் வாசுவையும் இழுத்துக்கொண்டு டென்னிஸ் விளையாடச் சென்றனர். வாசு கல்லூரியில் ஓரளவு நல்லவிதமாக ஆட கற்றிருந்தான் தான். நாலாவதாக ஆட பவியையும் இழுத்து வந்தான் பிரபு. நால்வருமாக ஆட இவனும் பவியுமே ஜெயித்தனர்.

போங்க ரெண்டு நல்ல ப்ளேயரும் ஒண்ணா சேர்ந்துட்டீங்க..... சின்ன பசங்க எங்கள ஜெயுச்சுட்டீங்க என்று விளையாட்டாக குறை பட்டனர் பிள்ளைகள்.
பவி வாஞ்சையோடு அவர்கள் தலையை கலைத்து விட்டு சிரித்துக்கொண்டாள்.
போங்கடா பொடிப்பசங்களா என்றாள் கேலியாக.
நாங்களா பொடிப்பசங்க?  இரு ஒன்ன....” என்று அவர்கள் இருவரும் துரத்திவர இவள் ஓட அதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான் வாசு.
அந்தச் சூழல் அவன் குடும்பத்தின் நினைவுகளை அவனுள் புரட்டி போட்டது.

அவனும் அவன் தங்கை கோமதியும் கூட இப்படித்தான் பேசிப் பழகி கிண்டல் செய்து விளையாடி என்று மிக நெருக்கமாக இருந்தனர்
. அவன் பள்ளி இறுதி படிக்கும்வரை இதுபோல கொண்டாட்டமாக இருந்ததுதான் அவன் குடும்பமும். அதன்பின் யார் கண் பட்டதோ பெற்றோர் இருவரும் ஒன்றாக ஒரு விபத்தில் இறக்க அவனும் கோமதியும் அம்போ என்று விடப்பட்டனர். கொஞ்சம் பணமும் வீடு என்று ஒரு பிளாட்டும் இருந்தது. எப்படியோ  தன்னையும் தேற்றிக்கொண்டு கோமதியையும் தேற்றி படிப்பை முடித்தான்.

கோமதி டிகிரி முடித்ததும் அவளுக்கு ஏற்றவனாக பார்த்து வெங்கட்டை திருமணம் செய்துவைத்துவிட்டான்
. அவளும் அன்பாக பண்பாக குடித்தனம் செய்கிறாள்..... பெங்களூரில் இருப்பதால் அவனால் அடிக்கடி போய் பார்க்க முடிவதில்லை. வாசு பொறி இயல் படித்துமுடித்து எம் பி யே வும் முடித்து ஒரு வேலையும் தேடிக்கொண்டான். அங்கே நன்று கால் உரைத்து கற்றுத்தேர்ந்தபின் இதோ இப்போது இந்த கம்பனியின் ஜி எம் பதவியை ஏற்றிருந்தான்.

ஓடிக் களைத்த பவி ஒரு ஓரமாக தனியே ஏதோ யோசித்தபடி அமர்ந்திருந்த வாசுவை கவனித்து அவனிடன் சென்றாள்.
என்னாச்சு மிஸ்டர் வாசு.... எனி ப்ராப்ளம்?” என்றாள்.
ஓ நத்திங் மேடம் என்றான் புன்னகைத்தபடி . அவனது பளீரென்ற மின்னல் சிரிப்பை எப்போதுமே அவள் உள்ளூர ரசிப்பாள். புன்னகை அரசி போல இவன் புன்னகை அரசன் என்று எண்ணிக்கொள்வாள்.
நான் இங்க உங்க பாசின் மகள் இல்லை..... ஜஸ்ட் பவித்ரா..... கால் மி தட் என்றாள்.
நீங்களும் தானே மிஸ்டர் வாசுன்னு சொல்றீங்க என்றான் அவன் வெள்ளையாக சிரித்து.
சரி வாசு ஒகே என்றாள் அவளும் சரிக்கு சரி.
ஷ்யூர் பவித்ராஎன்றான்.

எல்லோரும் பவி என்றழைக்க அவன் பவித்ரா என்று முழு பேரைச் சொல்லி அழைத்ததும் அவளுக்கு பிடித்தே இருந்தது
.
வாங்க உள்ளே போகலாம்.... வெய்யில் ஏறிடுச்சு.... போய் சாப்பிட்டு வேற ஏதானும் ப்ளான் போடலாம்னு போயிருக்குங்க வாலுங்க ரெண்டும்என்றாள் பிள்ளைகள் போன திசையை பார்த்தபடி.
பைன் சாப்ஸ்.... எனக்கு அவங்கள ரொம்ப பிடிச்சுபோச்சு என்றான் வாசு.
ஓ அப்போ என்னைத்தான் பிடிக்கலைபோல...” என்றாள் வேண்டும் என்றே அவனை சீண்ட
ஐயோ, அப்படி இல்லை பவித்ரா என்றான். “உங்களையும் தான் என்றான் பிடிச்சிருக்கு என்ற வார்த்தையை உபயோகிக்கத் தயங்கி அப்படியே நிறுத்தினான்.
அதைக் கண்டுகொண்டாள் பவி.ஒகே கம் என்று அழைத்துப் போனாள்.

புதியவன் ஆதலால் அவன் தயங்கக் கூடும் என்று அசோக்கும் பிரபுவும் அவனோடே அமர்ந்து உண்டனர்
. அருமையான சாப்பாடு பாக் செய்து கூடவே கொண்டு வந்திருந்தனர். மதுவும் வசுவும் பரிமாறிவிட்டு தங்கள் பிளேட்டை எடுத்துக்கொண்டு அமர, பின்வரும் நேரத்தில் தாங்களே எழுந்து வேண்டியதை நிரப்பிக்கொண்டு சாப்பிட்டனர் அனைவரும். அவ்வப்போது வாசுவின் தட்டை கவனித்து என்ன வேண்டும் என்று எல்லோரும் கவனம் வைத்துக்கொண்டனர்.

இந்த கவுரவம் அவனுக்கு ரொம்பவே மனம் கனியச் செய்தது
.... தான் யாரோ எவனோ..... ஜஸ்ட் ஆபிசில் ஒரு பணியாளன்.... எனக்கு இந்த மொத்த குடும்பமும் ஏன் இப்படி கவனிப்பும் அன்பும் தருகின்றனர்..... அதுதான் பெரிய மனதுகொண்ட குடும்பங்களின் சிறப்பு போலும் என்று எண்ணிக்கொண்டான்.
ரொம்பவே நன்றி கூறிக்கொண்டான் வெளிப்படையாக.
என்னப்பா நீ, இதுக்கெல்லாம் போய் இமோஷனல் ஆகறே என்று செல்லமாகக் கடிந்து கொண்டான் வித்யா. அவனைப்பார்த்து ஆச்சர்யப்பட்டு போனாள் பவி. ‘இந்த ஆண்பிள்ளையின் உள்ளே இத்தனை மென்மையான மனதா!’ என்று.

அத்யாயம் முப்பத்தி ஒன்பது

உணவிற்குப்பின் அமர்ந்து டிவிடியில் பழைய பாடல்கள் பார்த்தனர்.
பரவாயில்லியே, இந்த காலத்துப் பசங்களா இருந்தும் பழைய படங்கள விரும்பிப் பார்க்கறீங்களே!” என்று கேட்டான் வாசு பிள்ளைகளிடம். பெரியோர் அனைவரும் சற்று கண் அசந்திருந்தனர்.

ஐயோ வாசு சார், அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க... இதா இருக்காளே எங்கக்கா அவளுக்கு இதுமட்டும் தான் பிடிக்கும்.... அதனால நாங்களும் அதையே பார்த்துப் பழகிப்போச்சு..... இப்போ எங்களுக்குமே இதுவே பிடிச்சுப் போச்சு என்று அலுத்துக்கொண்டான் அசோக்.
ஓ அப்படியா! ஆச்சர்யம்தான் என்று சிரித்தான். அங்கே
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்ராரோ ஓ ஹோ ஹோ....” என்று சரோஜாதேவி பாடிக்கொண்டிருந்தார்.

அதை கண்கொட்டாமல் பார்த்திருந்தாள் பவி. அடுத்து
பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது தூக்கம் வராது....” என்று தேவிகா பாடினார்.
பவியின் கண் அங்கிங்கு நகரவில்லை.
கட்டவிழ்ந்த கண் இரண்டும் உங்களைத் தேடும்
பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்...” என்றபோது மெல்ல ஓரவிழியால் வாசு என்ன செய்கிறான் என்று பார்த்தாள்.

அவனுக்குமே பழைய பாடல்கள் பிடிக்கும் அதிலும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அதனால் அவன் அந்தப் பாடலை ரசித்து ஆசையாக பார்த்தபடி மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அவன் உதடு பாடலுக்கேற்ப அசைவதைக் கண்டு அவளுக்கு ஆச்சர்யம். அவளும் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் தான் உதடு அசையாமல். இல்லையெனில் இந்த வாலுப்பிள்ளைகள் கேலி பேச ஆரம்பித்துவிடுவரே.
அடடா சுசிலாம்மா கெட்டா போ என்பான் அசோக்.
இல்லைடா ஜானகியம்மா போல பாடறா என்பான் பிரபு.
போங்கடா குரங்குகளா என்பாள் அவள் ஆத்திரமாக.
இதில் உண்மை என்னவென்றால் அவள் மிக அருமையாகப் பாடக்கூடியவள். அதுவும் பழைய பாடல்களை மிகவும் உணர்ந்து அனுபவித்துப் பாடுவாள். கிண்டல் செய்தபோதும் அவளை அடிக்கடி பாடச்சொல்லி கேட்பர்.

அந்தப் பாடல் முடிய
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...” என்று அடுத்த பாடல் ஆரம்பிக்க,
தங்களை மறந்து வாவ் வாட் அ சாங்என்றனர் வாசுவும் பவியும் ஒரே நேரத்தில் ஒரேபோல்.
அசோக்கும் பிரபுவும் உஹூம் இது தேறாது, வாடா நாம வேலையப் பார்ப்போம் என்று அகன்றுவிட்டனர்.
இருவரும் ஒரேபோல் கூற ஒருவரை ஒருவர் திரும்பி ஆச்சர்யமாக பார்த்தபடி உங்களுக்கும் இந்தப் பாடல் அவ்வளவு பிடிக்குமா?” என்று கேட்டாள் பவி.
ஆம் ரொம்ப என்றான் நேராக அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி.
ஓ நைஸ் என்றபடி பாடலில் கவனம் செலுத்தினாள். கூடவே முணுமுணுத்தாள்.
ரொம்ப நல்லா பாடறீங்களே..... கற்றுக்கொண்டீங்களா?” என்றான். “சாரி டிஸ்டர்ப் பண்றேனோ என்று சட்டென நிறுத்தினான்.
இல்லை இல்லை அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை.... ஆமா கொஞ்சநாள் கற்றுக்கொண்டேன், நாலு வருடம் மட்டும் என்றாள்.
ஓ கிரேட் என்றான்.
உருகி உருகி சுசீலா பாட அதை உருகி உருகி கேட்டனர் இருவரும். அதில் ஒரு சுகம் கண்டனர். அது அவன் வாழ் நாளில் ஒரு நன்னாள் என்று எண்ணிக்கொண்டான் வாசு.

பின்னோடு பெரியோர் எழுந்து வர எல்லோருமாக காபி குடித்து கொஞ்சம் ஸ்நாக்ஸ் எடுத்துக்கொண்டு பார்மில் சுற்றி வந்தனர். பிரபுவும் அசோக்கும் நீச்சல் அடிக்க போயிருந்தனர். வாசுவும் பவியும் மற்றவரோடு சேர்ந்து அமர்ந்து அவர்கள் பேசும் அந்தக்கால கதைகளை கேட்டுக்கொண்டனர். அவ்வப்போது ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

மாலை மயங்க அங்கிருந்து கிளம்பி, வரும் வழியில் அஷ்டலக்ஷ்மி கோவிலில் இறங்கினர்.
என்னப்பா வாசு, தெய்வ நம்பிக்கை உண்டா..... வரியா சாமி கும்பிட?” என்று கேட்டார் வித்யா.
நிச்சயமா உண்டு சார்..... வந்துகிட்டே இருக்கேன் என்று பின் தொடர்ந்தான்.
குட், கம் என்றபடி அவர் மதுவோடு முன்னே நடந்தார்.
பவி கால் செருப்பை விட்டுவிட்டு பின்னே வர அவளுக்காகக் காத்திருந்து கூட நடந்தான். அவளும் அவனை ஏறிட்டு புன்னகைத்து கூட நடந்தாள். தரிசனம் முடிந்து இறங்கிவந்து அப்படியே நடந்து கடலோரம் வந்து மணலில் அமர்ந்தனர். அங்கேயே அமர்ந்து பேசி சிரித்து பொழுதும் சாயக் கிளம்பினர்.

என்னப்பா வாசு, வீட்டுல கவலைப் படுவாங்களா... லேட் ஆயிடுச்சா உனக்கு?” என வினவ
அப்படி எல்லாம் எனக்குன்னு யாரும் இல்லை சார்..... நான் தனியாத்தான் இருக்கேன்.... இருப்பது ஒரே தங்கை.... அவளும் திருமணமாகி பெங்களூரில் வாழ்கிறாள்... வீட்டில் ஒரு வேலை ஆள் இருக்கிறார் என்றான்.
அடக் கடவுளே இவன் தனியா... அவனுக்கென்று யாருமே இல்லையாஎன்று விசனப்பட்டாள் பவி. அவள் மனதில் ஒரு இனம்புரியாத சோகம்.

அவளே அப்படி என்றால் மது அவள் தாயல்லவா
..... அவள் தாய் மனது வாசுவிற்க்காக துடித்து போனது. ‘தாயில்லாப் பிள்ளையா அனாதையாமே ஐயோ தெய்வமே என்று பதறினாள்.

போகுது பா.... இப்போதான் நாங்க இருக்கோமே...... எங்களையே உன் குடும்பமா நினைச்சுக்க..... வருத்தப்படாதே என்றாள் கனிவாக. அவளை பனித்தக் கண்களோடு ஆச்சர்யமாகக் கண்டான் வாசு.
தேங்க்ஸ் மேடம்..... இட் மீன்ஸ் அ லாட் டு மிஎன்றான்.

தொடரும்...

No comments:

Post a Comment